|
‘நிலைமை கவலைக்கிடம்’ ‘கல்லையும் உருக்கும் கண்ணீர்க்காவியம்’
சமீப காலத்தைய போர்ச்சூழல் காரணமாக, ‘இறுதியாக வன்னியில் வாழ்ந்த எம் கிராம மக்கள்’ பற்றிய தகவல்களையும் விபரங்களையும் அவ்வப்போது இவ்விணையத்தளம் மூலம் வெளிவரச் செய்ததன் பலனாக பயனுள்ள நல்லவை பல நடந்தன. அதற்கு அடிப்படைக் காரணமான இவ்விணையத்தள நிர்வாகி அவர்களுக்கும், தகவல்கள்-விபரங்களைத் தந்துதவியதோடு மட்டுமல்லாது அன்றாடம் அம்மக்களது பசிப்பிணி நீக்கத் தொண்டாற்றிய வவுனியா வாழ் உறவுகளுக்கும், பொருளுதவி செய்த புலம்பெயர் ஊரவர்களுக்கும், பாதிக்கப்பட்ட அதே மக்கள் சார்பாக மீண்டும் நன்றி கூறுகிறேன்.
பலத்த பிரயாசைகளுக்குப் பின் முகாம்களைவிட்டு நீங்கி தத்தமது சொந்த இடங்களுக்கெனத் திரும்பியவர்களுள், குரும்பசிட்டி மக்கள் பாவிகளே. கிராம இழப்பு.. என்னே அந்த வேதனை… அயலூர்களில் ஏனோதானோவென்று அவர்கள் சீவிக்கிறார்கள். நடைப்பிணங்களாய் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ‘நிலைமை கவலைக்கிடம்’.
‘கல்லையும் உருக்கும் கண்ணீர்க் காவியம்’ அவர்களது நிலைமைகளை அன்றாடம் நேரிற் காண்பவர்களும் தங்களால் இயன்ற பல உதவிகளைச் செய்பவர்களுமான சமூக சேவையாளர்களில் முக்கியமான ஒருவர், இளைப்பாறிய பாடசாலை அதிபரான திரு. ஆ.சி. நடராஜா அவர்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் அவரால் வாரந்தோறும் எழுதப்படும் கட்டுரையின் தலைப்புதான், ‘கல்லையும் உருக்கும் கண்ணீர்க் காவியம்’. ‘குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம்’ மூலம் இயன்ற உதவிகளை மட்டுமல்லாது, இயலாதவற்றையும் ஈடுசெய்கிறார்கள் என்றே நான் கூறுவேன்.
மேற்படி சங்கம் மூலம் 26.12.2009 திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். அவர்களது அநுமதியுடன் அதன் வாசகங்களை அப்படியே தருகிறேன்.
எம் ஊரது உடன்பிறப்புக்களுக்கு, வன்னி வாழ்விலிருந்து தற்போது குடாநாடு மீண்டுள்ள எமது ஊர்மக்கள் பலரது நிலைமை கவலையளிப்பதாகவுள்ளது. வெறுங்கையோடு வந்து சேர்ந்திருக்கும் இம்மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்து வருகின்றோம். எம் மக்களுக்கு உதவுவதற்கு இப்படியான ஒரு காலம் எதிர்காலத்தில் வரப்போவதில்லை. எனவே தாங்களும் இம்மக்களுக்கு உதவிக்கரங்களாகி எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி. தங்கள் சேவையில், ஆ.சி. நடராஜா – தலைவர் ரீ.வீ. கிருஸ்ணசாமி – உபதலைவர் து. கலியுகவரதன் - செயலாளர் அ. சிவராசா – பொருளாளர்
தொலைபேசி: (1). 021 222 5867 (காலை 9.30 – மாலை 5.30) (2). 021 321 8218 (இரவு 8.30 – காலை 8.30)
வங்கிக் கணக்கு இலக்கம்: PEOPLE’S BANK C/A NO. 2995, KANKESANTURAI. பாதிக்கப்பட்ட குரும்பசிட்டி மக்களில் இதுவரை அங்கு பதிவான தொகை 86 ஆகும். மேற்படி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால், பலத்த பிரயாசைகளுக்கு மத்தியில் அரச உதவித்தொகை பெற்றும், புலம்பெயர் உறவுகளின் மூலம் கிடைத்தவற்றினாலும் பலதரப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்கள். உடுபுடவை, துவிச்சக்கர வண்டிகள், பாடசாலைப் புத்தகங்கள், பேனா-பென்சில், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். தற்காலிக வாழ்விட ஒழுங்குகள், பாடசாலைப் பதிவுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக, பணவுதவிகளும் செய்து வருகிறார்கள். வாரத்திற்கு ஒருதடவை சந்திப்புகளை நடாத்தி, குறைகளைக் கேட்டறிந்து உதவிபுரிகிறார்கள்.
பாதிப்புக்குள்ளான அம்மக்களுக்கு உடனடியான உதவிகனைக் கிடைக்கச் செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். ஏற்கெனவே இக்கடிதத் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன் போன்ற நாடுகளில் வாழும் சிலரோ, பலரோ உதவிகள் செய்திருப்பதாக அறிந்துகொண்டேன். இன்னும் உதவிகள் அங்கு தேவைப்படுகிறது என்பதே உண்மை.
‘எதுவந்தபோதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்’
நன்றி! ‘நம்நாடு’ காந்தன்.
|